Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Wednesday, December 23, 2009

"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா!..."யென்ற பாடல் வேலு டீக்கடையிலிருந்து வந்துகொண்டிருக்க, அந்த ஒலி மறித்ததால் செல்போனின் மறுபுறத்தில் வினித் கூறிய விடயங்கள் இவள் காதில் விழமறுத்துவிட்டது. சற்றுதூரம் சென்றபின் "இப்ப சொல்லுங்க அப்ப சரியா கேட்களை" என்றாள். "அதான் அப்ப சொன்ன மாதிரி கிளம்பி இங்க வ.."என்று சொல்லிய போதே இவளின் செல்போன் 'வந்துவிடாதே' என்ற வார்த்தையை கத்தரித்து இவளுக்கு 'வா' என ஒப்பித்து பணமில்லாததால் இணைப்பு துண்டிப்புக்குள்ளாகிவிட்டது. 'ச் சே! அதுக்குள்ளையும் கட்டாயிருச்சு, சரி வீட்டுக்கு போனவுடனே அப்ப சொன்ன மாதிரி கிளம்பவேண்டியாதுதான்' என்று மனதுக்குள்ளேயே கூறிவிட்டு, திருப்பாலையின் மந்தையிலிருந்து வீடு நோக்கி விரைகிறாள்.

இங்கே திருப்பரங்குன்றத்து பேருந்து நிறுத்தத்தின் அருகே நின்றுகொண்டு வினித் 'ம் சரியா போச்சு! சொல்லுறதுக்குள்ளையும் கட் பண்ணிட்டா' யென எண்ணியவாறே திரும்பவும் அழைக்கமுயற்சிக்கிறான், எதிர்முனையில் இணைப்பு உயிறற்றுயிருப்பதால் இணைப்புகிட்டவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தபின் இவன் காத்திருந்த 48அ பேருந்து திருமங்கலத்திலிருந்து வந்துகொண்டிருந்தது. வழக்கம்போல முட்டிமோதி ஏறியப்பின் கடைசி இருக்கையின் ஜன்னலோரம் அமர்ந்துகொண்டான். கூட்டம் மெதுவாக இருக்கைகளை நிறைத்தது பேருந்தும் நிறைந்தது ஓட்டுனர் இருக்கைக்கு இரண்டு விசில் பறந்தது வண்டியும் நகர்ந்தது. இவனுக்கு இருக்கும் ஒரே குழப்பம் முன்பு கூறியதைப்போல அவள் கிளம்பி இங்க வந்துவிடுவாளோ என்பதுமட்டும்தான். இருந்தாலும் அவனுக்குள்ளே சமாதானப்படுத்திக்கொண்டு தனது FMயை போட்டு கேட்டுக்கொண்டு திருப்பாலை நோக்கி கிளம்பிவிட்டான்.

இங்கே திருப்பாலை பேருந்து நிறுத்ததில் வித்யா பேருந்தில் ஏறினாள். 'சீட்டு சீட்டு' யென விற்றுக்கொண்டிருந்த அந்த நடத்துனர் "எம்மா இந்தக் கூட்டதிலையும் படியில நிக்கிறயே உள்ள போமா! சார் கொஞ்சம் விலகிக்கோங்க" யென்று கனிவோடு உள்ளே அனுப்பிவைத்தார். திருப்பரங்குன்றத்துக்கு டிக்கெட் சீட்டை வாங்கியபின் கம்பிகளை இறுகபிடித்துக்கொண்டாள் வித்யா. இவளுக்கு பேருந்து பயணமென்றாலே பிடிக்ககாது இருந்தாலும் இவள் காதலன் சொன்னதால் இந்த நெருசல்களை அனுசரிக்கிறாள். திடிரென்று ஒரு சந்தேகம் 'ஒரு வேளை அவரு என்னோட அப்பாவ பார்த்திருப்பாரோ' என யோசிக்கலானாள், காரணம் இவள் அப்பாவும் அம்மாவும் திருப்பரங்குன்றத்திற்கு ஒரு கல்யாணத்துக்காக போயிருக்கிறார்கள். 'ச்சே அப்படி பார்த்திருந்தா என்னை வராதணு சொல்லிருப்பாரே' என சமாதனப்படுத்திக்கொண்டாள். இவளோ காதலனுடன் கோவிலுக்கு போகலாம் என மனக்கோட்டைகட்டி திருப்பரங்குன்றம் நோக்கி பயணிக்கிறாள். இவளிடன் செல்போனுமில்லை அதனால் தகவல் பரிமாற்றமும் சாத்தியமில்லை. பேருந்து பொடி நடையாக சாலைகளில் ஊறுகிறது

"நீ வருவாயென நீ வருவாயென, பார்த்து பார்த்து கண்கள பூத்துவிட்டேன்.." என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்க ஒருவர் வினித் அருகே அமர்ந்தார். உடனே தனது FMயை அணைத்து அந்த நபரை உற்று நோக்கலானான். அவர் பார்ப்பதற்கு 33 வயது நிறைந்தவராக தோன்றினார் கையில் சில பேப்பர்கட்டுகள் பையில் வாட்டர்பாட்டிலென ஒரு பத்திரிக்கை நிருபரை ஒத்திருந்தார். "என்னதம்பி இந்த ஊர்தானே"யென்றார். வினித்துக்கு வினோதமாகயிருந்தது அவன் ஊரிலே ஒருவர் இப்படி கேட்பதால், "ஆமா, என்னையபார்த்தா வெளியூர்மாதிரிதெரியுதா?" என்று வெகுளியாகக் கேட்டான். "அதுயில்லப்பா நான் ஊருக்கு புதுசு அதான் ஊரப்பத்தி கேட்டுக்கலாமுனு கேட்டேன்" என்றார். உடனே வினித் "அப்ப நீங்க பத்திரிக்கை நிருபர்தானே கரேட்டா?" என்றான் ஆவலுடன். "ஹி ஹி என்ன பார்த்தா அப்படி தெரியுதோ! நான் டைரெக்டர் குமரேசனோட அஸிஸ்டண்ட் ஒரு கதை விசயமா மதுரையை சுத்தி பார்க்கவந்திருக்கேன்" என்று கூறி மீண்டும் "ஒரு டுவிஸ்ட் கதைய ரெடி பண்ணியிருக்கேன் அதுக்குத்தான் லொக்கேஷன் தேடுகிட்டுயிருக்கேன்" என்று முடித்தார். வினித்துக்கு ஆர்வம் கூடிவிட்டது. அவன் அவரிடன் வினாவ. "கதைப்படி என்னோட ஹிரோ இதுமாதிரி பஸ்ல இதுமாதிரி கடைசி சீட்டுல உட்கார்ந்து ஒரு இடத்துக்குப் போறான், ஆனால் அவனோட லவ்வர் அந்த இடத்திலயிருந்து இவனப்பார்க்க இங்க வர்றாள். எப்படி கதை?"என்றார் சிரித்துக்கொண்டே. வினித் புதிராக "சரி அடுத்து எப்படி". "அங்கதான டுவிஸ்ட், வந்தவழியில இந்த பெரியார் பஸ் ஸ்டாண்டில இவுங்க ரெண்டு பேரும் சந்திக்கிறமாதிரி கதை போகுது.." என்று கூறிய போது பேருந்து பழங்கானத்தம் சிக்னல் சந்திப்பில் நின்றது.

கோரிப்பாளையம் வந்துகொண்டிருந்த வித்யாவின் பேருந்து நிறுத்ததில் சற்று மக்களை கீழிறக்கிவிட்டது. வித்யாவுக்கு கடைசி ஜன்னலோரயிருக்கை கிடைத்தது. அவள் அவ்வளவாக குழம்பவில்லை அவளுக்கு ஒரு நம்பிக்கை எப்படியும் அவள் காதலன் திருப்பரங்குன்றத்திலேயே காத்திருப்பான் என நம்பினாள். மீண்டும் ஒரு முறை தனது பெற்றவர்கள் கண்ணுக்கு அவன் மாட்டிவிடக்கூடாதுயென பிரத்தித்தாள். இவள் கணக்குப்படி முகூர்த்த நேரம் 11.30 க்கு முடிந்து பந்தி முடிந்தபிறகு உச்சி வெயில் வருவதால் எப்படியும் இவளின் பெற்றோர் கோவிலுக்கு வரமாட்டார்களென திட்டமிட்டாள். ஆனால் இந்த நேரத்தில் காதலனை சந்திப்பது சற்று ஜாக்கிரதையான விசயம்தான் அதே நேரத்தில் இவளும் பெற்றவர்களின் கண்ணுக்கு படக்கூடாதுயென்பதிலும் இவள் கவனமாகயிருக்கிறாள்.

இரண்டு சீட்டுக்கு முன்னாடியிருந்த ஒருவர் அழைத்ததால் கிளம்பிய அஸிஸ்டண்ட் டைரெக்டர் திரும்பி வந்து வினித்திடம் "தம்பி பழங்கானத்ததில சில லொக்கேஷன் பார்க்கலாமும் இருக்கேன், போயிட்டு வாரேன்" என்றார். "சார் கடைசியா ரெண்டு பேரும் சந்திச்சுகிட்டாங்களா?" என்றான் மிகுந்த ஆர்வமுடன். "அதுக்குத்தான் லொக்கேஷன் பார்க்க போரேன்" என்றுகூறிவிட்டு கிழே இறங்கிவிட்டார். வினித்துக்கு ஒரே புதிராகவேயிருந்தது அவர்கள் சந்தித்தார்களா இல்லை சந்திக்கவில்லையாயென குழம்பி போனான். அப்போதுதான் அவனுக்கு ஒரு பொறிதட்டியது அவன் கதையும் அதேபோலயிருக்குமோயென யூகிக்கதொடங்கினான். வழிநெடுகே செல்லும் பேருந்துகளையெல்லாம் கவனிக்கத்தொடங்கினான்.
திருப்பரங்குன்றம் டு திருப்பாலை வழி பெரியார்

பெரியாரை அடைந்தது வித்யாவின் பேருந்து எதற்சியாக எதிரே ஒரு 48பி பேருந்து கடந்தது அந்த பேருந்தும் திருப்பரங்குன்றத்தின் வழியாக வந்து திருப்பாலை செல்லும் பேருந்து. அந்த பேருந்தை பார்த்தபின் அவளுக்கு ஒரு ஆர்வம் எதிரே வரும் எல்லாம் பேருந்துகளையும் கவணிக்கத்தொடங்கினாள். இவள் பேருந்து கூட்டநெருசலில் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்க தூரத்தில் வினித்தின் பேருந்தும் வளைந்து கூட்டத்திற்குள் புகுந்தது.வினித்தின் வலது புறஜன்னலைப் பற்றிக்கொண்டு வெளியே பார்க்கிறான், அதேபோல் வித்யாவும் தனது வலதுபுற ஜன்னலில் மக்கள் கூட்டத்தைப் பார்க்கிறாள். இரண்டு பேருந்தும் மெதுவாக வாகனநெருசலில் சிக்கி நகர்கிறது. இடையில்புகுந்த முறுக்கு விற்கும் பையன் வினித்திடம் முறுக்கு வாங்கச்சொல்லி கெஞ்சுகிறான். வினித்தும் அவனிடம் வேண்டாமென்றாலும் திரும்ப திரும்ப கேட்டு வினித்தையே வாங்கவைக்கிறான் கெட்டிக்காரச்சிறுவன். திடீர்ரென வித்யா தனது அண்ணனை ஒரு பேருந்தில் கண்டாள் உடனே பேருந்தின் இடதுபுறத்து இருக்கைக்கு மாறினாள். வினித்தின் பேருந்து சிக்னலைகடந்து திருப்பாலை நோக்கி முந்தியது. வித்யாவின் பேருந்து திருப்பரங்குன்றம் நோக்கி சீறிப்பாய்ந்தது. வித்யா இடதுபுறத்தில் ஓடும் சைக்கள்களைக் கண்டவாறே செல்கிறாள். வினித் வலது புறத்தில் எதிர் வரும் மற்றபேருந்துகளைக்கண்டவாறே செல்கிறான்.

திருப்பரங்குன்றத்தில் இறங்கியவுடனே தனது அப்பா நிற்பதைக்கண்டு திகைத்துவிட்டாள் வித்யா. தன்மீது அப்பா கொண்டுள்ள அத்தனை மதிப்பையும் இன்று இழந்துவிடுவோமோயென அஞ்சியவள் பேசமுடியவில்லை. சற்றும் எதிர்பாரதவிதமாக தனது காதலனும் அவர்களுக்கு பின்னால் நிற்பதைக்கண்டு மிரண்டுபோனாள் வித்யா. "ஹாய் வித்யா" யென காதலன் அழைப்பதற்குள் "என்னம்மா இந்தப்பக்கம்" என அவளின் அப்பா முந்திக்கொண்டார். காதலன் சுதாரித்து கண்டுகொண்டான் தனது மாமனாரை. "அப்பா நீங்க கலியாணத்துக்கு போகலையா.."என பதட்டத்துடன் பாசமாகவும் கொஞ்சம் நடிப்புடனும் கேட்டாள் வித்யா. அவளின் அம்மா "அப்பா கேட்கிறதுக்கு பதில் சொல்லு" என்றார் சற்று கறாராக. அப்போது வந்த தொலைபேசி அழைப்பில் அம்மாவும் அப்பாவும் சமாதானமாகி வித்யாவை திரும்ப தனது வீட்டுக்கு எப்போதும் போல கூட்டிசென்றனர். வித்யாவின் காதலன் நிலைமையறிந்து தப்பித்ததை எண்ணி வினித்தின் மனைவிக்கு நன்றிசொல்லி வீடுவந்தான்.

ஒன்று புரியாதவளாக வித்யா வீடுவந்தாள். இவளது அண்ணன் வினித் உள்ளே வரும் வித்யாவிடம் "உன்னை பெரியார் பஸ் ஸ்டாண்டில பார்த்தேன் உன்னைகூப்பிட்டு பார்த்தேன் ஆனா நீ கண்டுக்கவேயில்லை அப்புறம் உங்க அண்ணி சொன்னதுக்கப்புறந்தான் புரிஞ்சது" என பட்டும்படாமல் ஒரு புதிரைப்போட்டு போனான். வித்யா வினித்தின் மனைவியை அதான் தனது அண்ணியின் அறைக்கு விரைந்தாள்

அங்கே தனது காதலன் வினித்தின் மனைவியிடம் சிரித்துபேசிக்கொண்டிருந்தான். "அண்ணி! நாங்கூட பயந்து போய்டேன் அப்பாவ அங்க பார்த்ததும்"என்றாள் வித்யா தனது அண்ணியிடம். "உங்க அண்ணே என்னைய வரச்சொன்னாங்கனு கிளம்பி கதவமுடப்போனே உடனே உங்க அண்ணனே வந்துட்டாங்க வந்தவுடனே வித்யாவை பெரியார் பஸ் ஸ்டாண்ட்ல பார்த்தேனு சொல்லிகிட்டே போனாங்க அப்பவே எனக்கு ஒரு டவுட் அப்புறம்தான் இவனுக்கு போன் பண்ணி கேட்டா நீ அவனோட கோவிலுக்குபோரங்கிற விஷயம் தெரிஞ்சது எனக்கு பதிலா உன்னைய கலியாணத்துக்கு அனுப்பிவச்சதா ஒரு பிட்ட போட்டேன்" என்று அண்ணி கூறினாள். "எது எப்படியோ நீங்க மேக்கப்பெல்லாம் போட்டு முடிக்கிறதுக்குள்ளையும் ஒரு பெரிய கதையே அரங்கேறிருச்சு" என்றான். "தம்பி! அத்தைக்கு போன் போட்டு நான் தான் வித்யாவை கலியாணத்துக்கு அனுப்பிவச்சேனு சொல்லைனா என்ன ஆயிருக்கும்? நிச்சயம்பண்ணதுக்குள்ளையும் ஊர்சுத்திரேங்களானு திட்டுவிழுந்துருக்கும். அப்புறம் உங்க கதைதான் அரங்கேறிருக்கும் " என்றாள் அண்ணி கிண்டலுடன். சிரித்துக்கொண்டே "அக்கா! நாங்கூட மாமாவை அங்க பார்ப்பேனு நினைக்கலை ஒருவழியா சும்மா கோயிலுக்கு வந்தேனு சொல்லி சமாளிச்சுட்டேன் ஆனால் வந்து இறங்கினவுடனே வித்யா முகத்துல ஒரு பயம் தெரிஞ்சுச்சு பாருங்க அடேங்கப்பா உலகமகா நடிப்புடா சாமி!" என்றதுமே மூன்றுபேரும் குலுங்கிச்சிரித்தனர்.

செம்மொழிப் பைந்தமிழ் மன்றம் வழங்கும் பரிசுப் போட்டிக்கான சிறுகதை

3 மறுமொழிகள்:

கமலேஷ் said...

கதையில் சுவாரஸ்யமான நீரோட்டம் இருக்கிறது...கண்டிப்பாக வெற்றிபெறும் வாழ்த்துக்கள்...

Anonymous said...

ம் நல்லதானிருக்கு

நீச்சல்காரன் said...

நன்றி கமலேஷ்