Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Thursday, October 17, 2013


நான்கு சாலைகள்
சங்கமிக்கும் வழியின்
மையத்தில் விழியற்ற
சிலையாய் நான்

வெந்த குடலுக்குச்
சொந்தமான பசி படிந்த
வயிற்றுக்கு எட்டாத
மிஞ்சிப்போன சோற்றை
எச்சிலிட்ட காக்கைகள்
என்மீது எச்சமிட்டுப்போகும்

சாலையில் மீளவழியற்று
மீந்துபோன மழைநீர்
மனிதனுக்கில்லாமல்
நாய்கள் நக்கியபின்
வாகனங்களால் என்
மீது வீசப்படும்

வடிகட்டிய வார்த்தைகளற்று
வாயாறக் கொட்டித்தீர்க்கும்
வாகனப்புகை
இரச்சலுடன் இருமலையும்
எனக்குத் தந்துசெல்லும்

கெட்டிக்கார வயது
இளரத்தங்கள் உல்லாசம்
கொட்டிப்போனப் பின்னே
என் முன்னே
விட்டுப்போன பீங்கான்
குடுவைகள் சிறுவர்களின்
பீடி செலவுக்கு உதவும்

ஆண்டுக்கொரு முறை
அரசியல் சதுரங்கத்தின்
பணவாடை மாலைகள்
என்னைப் பணயமாக்கி
சின்னச்சின்னக் கலக
குமிழிகளைச் சீண்டிவிடும்

அனுமானிக்க முடியாத
தொல்லைகளால்
அனுதாபமாக நிற்கிறேன்
மன்னிக்க மனமிருந்தும்
கேட்பதற்கு ஆளில்லையே

2 மறுமொழிகள்:

Anonymous said...

வணக்கம்

கவிதையின் வரிகள் மனதை கவர்ந்துள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் உண்மை...